Archive for January, 2020

2020 ஜனவரி 20-ம் திகதி இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் தனது நீண்டகால நண்பரான டிமிட்ரி மெடேவை தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதுடன் இரசியாவின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான சட்ட மூலத்தை இரசியப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்தார். ஸ்டாலினைப்போல் தானும் பதவியில் பல ஆண்டுகள் நிலைப்பதற்கு புட்டீன் முயல்கின்றார் எனச் சொல்லபடுகின்றது.

1999-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9-ம் திகதி இரசியாவின் அப்போதைய அதிபர் பொறிஸ் யெல்ஸ்ரின் தனது தற்காலிக தலைமை அமைச்சராக விளடிமீர் புட்டீனை நியமித்தார். அப்போதைய இரசியப் பொருளாதார நெருக்கடியை பொருளாதாரம் படித்தவரான புட்டீன் திறைமையாகக் கையாண்டதால் தனக்கு அடுத்த அதிபராக புட்டீனே வருவார் என யெல்ஸ்ரின் அறிவித்தார். புட்டீன் தற்காலிக தலைமை அமைச்சராக பதவியேற்ற சில நாட்களில் இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள குடியிருப்பு தொடர்மாடிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமாகவிருந்த செஸ்னியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகள் இரசிய மக்களிடையே அவரது மதிப்பை உயர்த்தியது. அன்றிலிருந்து இன்றுவரை புட்டீன் தன்னை ஒரு அசைக்க முடியாதவராக இரசிய ஆட்சி பீடத்தில் வைத்திருக்கின்றார். இரண்டு தடவை தலைமை அமைச்சராகவும் நான்கு தடவை அதிபராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அந்த நிலையை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தக்க வைக்கும் வகையில் 67 வயது நிரம்பிய புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி ஆற்றிய உரை அமைந்தது. அதன் பின்னர் இரசியாவில் புதிய தலைமை அமைச்சர் நியமிக்கப்பட்டார்.

நீட்டிய கரத்தை நிராகரித்த நேட்டோ

1990-ம் ஆண்டு மிக்கையில் கொர்பச்சோவும் 1991இல் பொறிஸ் யெல்ஸ்ரினும் இரசியா நேட்டோவில் இணைவதற்கு வைத்த முன்மொழிபுகள் நிராகரிக்கப்பட்டிருந்தும் புட்டீன் 2000-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனிடம் இரசியாவில் நேட்டோவில் இணைக்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதுவும் நடக்கவில்லை என்பதால் தன் வழி தனி வழி என இரசியாவை உலக அரங்கில் சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போன்ற நிலைக்கு உயர்த்தும் முயற்ச்சியில் அவர் இறங்கினார். அதற்காக இரசியாவை படைத்துறையில் உலகின் முதன்மை நாடாக்கும் இருபது ஆண்டுத் திட்த்தை 2000-ம் ஆரம்பித்தார்.

இரசியாவைத் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் அமெரிக்காவும் மற்ற நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் 2014-ம் ஆண்டில் இருந்து கடுமையாக முயற்ச்சிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் இரசியா தன்னுடன் இணைத்த கிறிமியா உக்ரேனுக்கு சொந்தமானது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 100 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை 24 நாடுகள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இது இரசியாவைத் தனிமைப்படுத்தும் முதல் முயற்ச்சியாகப் பார்க்கப்பட்டது. இந்த நாடுகள் இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை இரசியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின. இரசிய நாணயமான ரூபிளின் வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சி குன்றியமை, பன்னாட்டுக் கடன்களை இரசியா பெற முடியாமற் போனமை எனச் சில பின்னடைவுகளை இரசியா சந்தித்தது. ஆனால் பொருளாதாரம் படித்த புட்டீன் இரசியாவின் வலுவிழந்த நாணயப்பெறுமதியை நாட்டுக்குச் சாதகமாக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுத்தார். மற்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயற்படுவதைத் தீவிரப்படுத்தினார். இவற்றால் இரசியாவில் புட்டீனை விரும்புவோர் தொகை 85 விழுக்காடாக உயர்ந்தது.

இரசிய ஆட்சி முறைமைச் சவால்கள்

1993-ம் ஆண்டு வரையப்பட்ட இரசிய அரசியலமைப்புச் சட்டப்படி இரசியாவின் ஆட்சி முறைமை தலைவரால் நடத்தப்படும் கூட்டாட்சி குடியரசு (federal presidential republic) என விபரிக்கப்படுகின்றது. ஆனால் தனிமனித ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அது மாசு படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப்படுகின்றது. மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படும் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. புட்டீன் தனது ஆட்சிக்காலத்தை நீடிக்க 2008-ம் ஆண்டு இரசியாவின் அரசியலமைப்பைத் திருத்தி அதிபரின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தினார்.. பாராளமன்றத்தின் அனுமதியுடன் தலைமை அமைச்சரை அதிபர் நியமிப்பர். பாராளமன்றம் இரு அவைகளைக் கொண்டது அமெரிக்காவில் உள்ளது போல கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில அரசுகளும் இரு உறுப்பினர்களை மேலவையான கூட்டாட்சித் சபைக்குத் தெரிவு செய்யும். இரசியர்கள் பொதுவுடமை ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி முறைமை பற்றிய அனுபவம் குறைவு. அதனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் அடக்கு முறையின் கீழ் வாழ்வது அவர்களுக்கு சிரமமல்ல. ஆனால் ஊழல் குறைந்ததும் பொறுப்புக் கூறும் தன்மை மிக்கதுமான  ஒரு நிர்வாகக் கட்டமைப்பை புட்டீனால் உருவாக்க முடியவில்லை. பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடிய மக்களாட்சி முறைமை இரசியாவில் இருக்கின்றது. ஆனால் அக்கட்சிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுகின என்பது கேள்விக்குறியே. புட்டீனை எதிர்த்த அலெக்ஸி நவன்லி சிறையில் அடைக்கப்பட்டார் விமர்சித்த பொறிஸ் நெமொ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புட்டீன் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார். 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி இரசியப் பாராளமன்றத்தின் 450 தொகுதிகளில் 335ஐக் கைப்பற்றி வைத்திருக்கின்றது.  பழைமை வாதத்தையும் தேசிய வாதத்தையும் கலந்த கொள்கையுடைய கட்சி இரு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. சில கட்சிகள் பல கட்சி முறைமை இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக போலியாக புட்டீனால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச் சாட்டையும் மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றார்கள்.

புதிய அமைச்சரவை

இருபது ஆண்டுகளாக தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் புட்டீன் இன்னும் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனையை முற்றாகத் தீர்க்கவில்லை. இரசியாவில் வங்குரோத்து அடையும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு 57% அதிகரித்திருந்தனர். இருபது மில்லியன் இரசியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தான் காரணமல்ல என்று இரசியர்களுக்கு உணர்த்தும் பொருட்டு இரசியாவின் முழு அமைச்சரவையையும் புட்டீன் பதவி விலகச் செய்து புதிய தலைமை அமைச்சராக அதிகம் அறியப்படாத மிக்கையில் மிஷுஸ்டீனை நியமித்தார். இவர் இரசியாவின் வருமானவரித்துறைக்கு பொறுபான உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இரசிய வருமானவரித்துறையை எண்மியமயப்படுத்தி (Dgitalization) இரசிய அரச நிதியின் நிலையை சீர் செய்தவர். புட்டீனைன் அமைச்சரவை மாற்றத்தை பாராளமன்றத்தின் 434 உறுப்பினர்களில் 383 பேர் ஆதரித்து வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இரசியாவின் பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்குடனே புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அது 416பில்லியன் பெறுமதியான தேசியத் திட்டங்களை நிறைவேற்றப் போகின்றது. “எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எமது நாட்டின் உலகத் தராதரத்தையும் இத்திட்டங்கள் உயர்த்தும்” என்றார் புட்டீன்

2018-ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் அதிபராகப் பதவி ஏற்ற விளடிமீர் புட்டீன் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருக்கலாம். அதன் பின்னர் அவரது நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு புட்டீன் கொடுக்கும் பதில் பின்னரும் நானே வேறு வடிவில் வருவேனே. ஆம் 2024இன் பின் அதிபராகப் பதவி வகிக்க முடியாத புட்டீன் தலைமை அமைச்சரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் இரசியாவின் அரசியலமைப்பைத் திருத்தப் போகின்றார். அதன் பின்னர் அவரே தலைமை அமைச்சராக இருப்பார். 2020 ஜனவரி 15-ம் திகதி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் இதை வெளியிட்டுள்ளார். இரசியாவின் சீர்திருத்தச் சபையின் அதிகாரங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. 2024-ம் ஆண்டின் பின்னர் புட்டீனே அதன் தலைவராகவும் பணியாற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  புட்டீனின் வலது கரமாக நீண்ட காலம் இருந்தவரும் புட்டீனுக்குப் பின் அவரது இடத்தை நிரப்பக் கூடியவராகக் கருதப்பட்ட தலைமை அமைச்சர் மெட்வேடேவ் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இரசியாவில் ஓர் அரசியல் சீர்திருத்தம் அவசியம் என்பதை மேற்கு நாட்டினர் மட்டுமல்ல இரசியாமீது மிகுந்த பற்றுள்ள இரசியர்களும் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிவருகின்றனர். ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறல் பொறிமுறைமை மேம்படுத்தப் பட வேண்டும் என்பது பலராலும் உணரப்பட்டுள்ளது. இரசியப் பாராளமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுப்பது அதன் முதற்படி. சதுரங்க விளையாட்டிலும் குங்குஃபு சண்டையிலும் தேர்ச்சி பெற்ற முன்னாள் உளவுத்துறை அதிபரான புட்டீன் சிரியாவில் தனது நகர்வுகளைச் சாமர்த்தியமாக்ச் செய்து தனது எதிரிகளைத் திணறடித்தார். அதே போல் புட்டீன் தனது பொருளாதார அறிவை இரசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்த வேண்டும். அவரது புதிய அரசியலமைப்பு சதுரங்க விளையாட்டில் அரசரைப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் CASTLING போல் புட்டீனைப் பாதுகாப்பான அதிகார நிலைக்கு உயர்த்தாமல் இரசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய வகையில் அமைய வேண்டும். இரசியாவின் முன்னாள் சதுரங்க உலகச் சம்பியன் கஸ்பரோவ் புட்டீன் தன்னை இரசியாவின் உச்சத் தலைவராக்க முயல்கின்றார் எனக் குற்றம் சாட்டுகின்றார்.

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய ஈரானியர்கள் மதிநுட்பம் மிக்கவர்கள், பண்பாடு நிறைந்தவரக்ள், அவர்களது விருந்தோம்பல் உலகமறிந்தது. அத்தகைய பெருமை மிக்க ஈரானின் சிறப்புப்படையணியான குட்ஸின் தளபதி காசெம் சுலேமானீயைக் கொன்றதை அமெரிக்கா பலமுனை வெற்றியாகப் பார்க்கின்றது. லிபியாவின் பென்காசியில் அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டமைக்கு சுலேமானீ பொறுப்பு என நம்பிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மூதவை உறுப்பினர் மைக் பொம்பியோ பல மாதங்களாக சுலேமானியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். 2019 ஜூலையில் அதிபர் டொனால்ட் டிரம்பினது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு தருணம் பார்த்துக் காத்திருந்தார். சுலேமானியைக் கொன்றதன் மூலம் இனி ஒரு அமெரிக்கத் தூதுவர் கொல்வது தடுக்கப்பட்டது மட்டுமல்ல 1. எதிர் காலத்தில் ஈரானின் அதிபராக சுலேமானீ வரமுடியாமல் போனமை, 2. ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்தமை, 3. தீவிர அமெரிக்க விரோதக் கொள்கையுடைய ஹிஸ்புல்லா அமைப்பின் உச்ச நட்பை அழித்தமை போன்றவையும் அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றிகளாகக் கருதலாம்.

John Avery on Iran: Iran has an ancient and beautiful civilization, which dates back to 5,000 BC, when the city of Susa was founded. Some of the earliest writing that we know of, dating from approximately 3,000 BC, was used by the Elamite civilization near to Susa. Today’s Iranians are highly intelligent and cultured, and famous for their hospitality, generosity, and kindness to strangers. Over the centuries, Iranians have made many contributions to science, art and literature, and for hundreds of years they have not attacked any of their neighbors. Nevertheless, for the last 90 years, they have been the victims of foreign attacks and interventions, most of which have been closely related to Iran’s oil and gas resources. The first of these took place in the period 1921-1925, when a British-sponsored coup overthrew the Qajar dynasty and replaced it by Reza Shah.

நிறைவேறாத கனவுகள்

ஈரானின் கடற்படையை அழிப்பது, ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நிலைகளை அழிப்பது போன்றவை கூட சுலேமானீயைக் கொல்வதற்கு ஈடாகாது என மைக்கேல் பிரெஜென்ற் என்னும் ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி அமெரிக்க பாராளமன்றத்தின் முன் சாட்சியமளித்திருந்தார். அந்த அளவிற்கு அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலளிப்பவராக சுலேமானீ திகழ்ந்தார். 2003இல் இருந்தே அமெரிக்காவிற்கு எதிராக ஈராக்கில் ஈரான் செயற்படுகின்றது. யேமன் முதல் ஈராக்வரை அமெரிக்க நகர்வுகளைச் சிக்கலாக்குவதில் சுலேமானீ வெற்றி கண்டார். ஆனால் அமெரிக்காவை மேனா (MENA) என்று அழைக்கப்படும் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்தில் இருந்து விலக்க முன்னர் சுலேமானி கொல்லப்பட்டார். அல்ஜீரியா, எகிப்த்து, லிபியா, லெபனான், சிரியா, யேமன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈரானிய பேரரசை உருவாக்கும் ஈரானிய மதவாதிகளின் கனவு கரு நிலையில் இருக்கும் போதே சுலேமானீ கொல்லப்பட்டார்.

மைக் பொம்பியோ காத்திருந்த தருணம்

2018 மே மாதம் அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்த்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஓராண்டு பொறுத்திருந்த ஈரான் 2019 மே மாதம் ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் செய்யத் தொடங்கியது. அடுத்த மாதம் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது. அதற்கு அடுத்த மாதம் பிரித்தானியக் கொடியுடன் சென்ற ஒரு எரிபொருள் தாங்கிக் கப்பலைக் கைப்பற்றியது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலைச் செய்து. பின்னர் 2019 டிசம்பரில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் செய்யப்பட்டதில் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டார். அதை ஈரானின் ஆதரவு பெற்ற படைக்குழுக்களே செய்தன என அமெரிக்கா குற்றாம் சாட்டியது ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஈரான் மறுத்தது. ஈரானின் சேட்டைகளுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்காது என ஈரான் கருதுவதாக அமெரிக்கா நம்பியது. அதனால் காத்திரமான பதிலடி கொடுக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக்குழுக்களின் நிலைகளில் தாக்குதல் செய்து ஐம்பது போராளிகளைக் கொன்றது. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதி நாளில் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தை போராளி அமைப்பினர் முற்றுக்கையிட்டு முன்னரங்க காவல் நிலைகளை அழித்தனர். இந்தச் செயல் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ காத்திருந்த தருணத்தை அவர் காலடியில் போட்டது. சுலேமானீ இலகுவாகக் கொல்லப்பட்டார். ஜனவரி 3-ம் திகதி சுலேமானீ கொல்லப்பட்டவுடன் சவுதி இளவரசர் தனது உடன்பிறப்பான துணைப் பாதுகாப்பு அமைச்சரை அவசரமாக அமெரிக்கா அனுப்பினார். அவரது பயணத்தின் நோக்கம் ஒரு அமெரிக்க-ஈரான் மோதலை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

ஈராக் மீது ஈரானின் பிடியை அமெரிக்கா தகர்க்குமா?

ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஒழிப்பதற்கான முதற்படியாக சுலேமானீயின் கொலை அமைந்துள்ளது. ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்திற்கு எதிராக இனி அமெரிக்கா காய்களை நகர்த்தும். அதனால் ஈரான்-அமெரிக்க மோதல் களமாக ஈராக் மாறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஈராக்கியப் பாராளமன்றம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தாலும் அது தலைமை அமைச்சரின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது. தற்காலிக தலைமை அமைச்சராக இருக்கும் அதில் அப்துல் மஹ்தி ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரிக்கும் போது தனக்கு ஆபத்து எனக் கருதுவதால் அவர் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவர் ஒப்புதல் அளித்தால் அமெரிக்க நடுவண்வங்கியில் உள்ள ஈராக்கிய அரசின் கணக்கு முடக்கப்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா ஈராக்கிற்கு விடுத்துள்ளது. சுலேமானீயுடன் கொல்லப்பட்ட ஈராக்கிய பொது நகர்வு அலகின் தளபதியின் இழப்பு பல படைக்குழுக்களைக் கொண்ட அந்த அலகை நிலை குலையச் செய்துள்ளது.

பழிவாங்குமா ஹிஸ்புல்லா?

சுலேமானீயின் படுகொலை உலகெங்கும் உள்ள சியா இஸ்லாமியர்களுக்கு அமெரிக்கா மீது உள்ள வெறுப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானியத் தளபதி காசெம் சுலேமானியையும் ஈராக்கிய போராளிக் கூட்டமைப்பான பொது நகர்வுக் குழுவின் தளபதி அபு மஹ்டி அல் முஹண்டிஸையும் கொன்றமைக்கு ஈடான பழிவாங்கல் செய்யப்பட வேண்டும் என ஹிஸ்புல்லா அமப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா 2020 ஜனவரி 5-ம் திகதி சூழுரைத்திருந்தார். மேலும் அவர் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் தமது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப்படையினரை அகற்றும் வகையில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி அமெரிக்கப்படையினருடன் ஒரு நேரடி மோதலை ஹிஸ்புல்லாவால் செய்வது கடினம். இஸ்ரேலின் அச்சுறுத்தல் லெபனானில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஹிஸ்புல்லா உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் ஆளணி இழப்பை ஹிஸ்புல்லா சந்தித்துள்ளது. லெபனானின் அரச படைகளுக்கு அமெரிக்கப்படையினர் பயிற்ச்சியளித்து வருகின்றனர். அவர்களின் மீது சிறிய அளவிலான அதிக தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்ளலாம். சுலேமானீயின் கொலையால் அவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப் படும் ஹிஸ்புல்லா உட்பட்ட படைக்குழுக்கள் கிளர்ந்து எழு வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாம். அந்த கிளர்ச்சியை அடக்கும் போர்வையில் அந்தப் படைக்குழுக்களை முற்றாக அழிப்பதற்கு அமெரிக்க முற்படலாம் என்பதையும் ஹிஸ்புல்லா உணரும். ஹிஸ்புல்லா வெறும் படைக்கலத் தாக்குதல் மட்டுமல்ல இணையவெளித்தாக்குதல்களையும் செய்யக் கூடியது.

ஈரான் குழம்புமா?

சுலேமானீ கொல்லப்பட்டவுடன் ஈரானிய மக்கள் ஆட்சியாளர்களின் பின்னால் திரண்டது உண்மை. ஈரானின் கலாச்சார நிலையங்கல் உட்பட 52 நிலகள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை ஈரானியர்களை ஆத்திரப்படுத்தியது மட்டுமல்ல பொருளாதாரச் சிக்கல்களால் அதிருப்தி கொண்டிருந்தவர்களையும் அரசு சார்பானவர்களாக்கியது. ஆனால் ஈரான் கொடுத்த பதிலடி போதாது என்பதை அவர்கள் உணரும் போது அவர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்காவின் உளவிற்கான எதிர்ப்பு நடவடிக்கையை ஈரான் சரியாகச் செய்யவில்லை. ஈரானின் பெரும் சொத்தான தளபதியை அமெரிக்க உளவாளிகள் நிறைந்த லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு காசெம் சுலேமானீயை போதிய பாதுகாப்பின்றி அனுப்பியது தவறானது என ஈரானியர்கள் கருதினால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தி பல ஈரானியர்களை ஈரானியப் படையினர் கொன்றதும் ஈரானிய மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. அந்த சினத்துடன் ஈரானியப் பொருளாதார தேய்வால் ஏற்படும் விரக்தி இணையும் போது ஈரானிய ஆட்சியாளர்கள் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இது எவ்வளவு தூரம் சரியானது என்பதை 2020 பெப்ரவரியில் நடக்கும் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கலாம். 2019 மே மாதம் ஈரானுக்கு எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பனை செய்ய இரசியா மறுத்திருந்தது. ஆனால் ஈராக்கிற்கு விற்பனை செய்ய இரசியா தற்போது முன்வந்துள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானின் ஆதிக்கம் வளர்வதை இரசியா விரும்பவில்லை. அதனால் இரசியாவிடமிருந்து பெரும் உதவியை ஈரான் எதிர்பார்க்க முடியாது.

சுலேமானீயின் திறன் தீவிரவாத அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து அவற்றை புவிசார் நலன்களுக்குப் பாவிப்பதில் முதன்மையானதாக அமைந்திருந்தது. அமெரிக்க அரசுறவியலாளர்கள் அந்த அமைப்புக்களை கையாளும் வழிகள் தெரியாமல் கடந்த 40 ஆண்டுகளாக திணறுகின்றார்கள். அவற்றில் கையாளவதற்கு மிகவும் கடினமானது ஹிஸ்புல்லா அமைப்பு. அதனால் அமெரிக்காவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் சிறிய தாக்குதல்களில் தொடங்கி ஒரு பெரிய போராக மாறக்கூடிய வாய்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் படையினரை ஈராக்கில் கொல்லக் காரணமாக அமைந்தவர், ஐம்பதினாயிரம் சியாப் போராளிகளைக் களத்தில் இறக்கி சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சியைத் தக்க வைத்தவர், ஈராக்கில் ஈரானின் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தவர் என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானின் குட்ஸ் படைத் தளபதி காசெம் சுலேமானீயின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

துல்லிய உளவுத் தகவலும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணையும்

சுலேமானியைக் கொல்வதற்கு தயக்கம் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதியில் தனது பாதுகாப்புச் செயலர் மைக் பொம்பியோவின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுலேமானீ மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். லெபனான் சென்ற காசிம் சுலேமானி அமெரிக்க உளவாளிகள் நிறைந்த டமஸ்கஸ் மற்றும் பாக்தாத் விமான நிலையங்களூடாக ஈரான் திரும்ப முயன்றார். ஈராக்கில் செயற்படும் வலிமை மிக்க ஈரானியப் போராளிகளின் கூட்டமைப்பான Popular Mobilization Front (PMF)இன் தலைவர்Abu Mahdi al-Muhandis உடன் பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டு பாக்தாத் விமான நிலையம் நோக்கி இருவரும் பயணித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்காவின் MQ Reaper என்ற ஆளில்லா விமனத்தில் இருந்து வீசப்பட்ட AGM-179 Joint Air-to-Ground Missile (JAGM) என்ற புதிய வகை ஏவுகணைகளால் படுகொலை செய்யப்பட்டார். உயர்தர உணரிகள், லேசர் வழிகாட்டல்கள், தொலைக்காட்சிக்கருவிகள், உட்படப் பல்வேறு வகையான வழிகாட்டல்களுடன் எந்த இலக்கையும் புகைகள், மூடுபனிகள் ஆகியவற்றின் மத்தியிலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய அந்த ஏவுகணை சுலேமானியையும் முஹாண்டியையும் அந்த இடத்திலேயே கொன்றது.

பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கும் படுகொலை

ஈரானியர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும் ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னியின் பெருவிருப்பத்துக்குரியவருமான சுலேமானியின் கொலைக்கு ஈரான் எப்படியும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது. ஈரான் பதிலடி கொடுத்தால் ஈரானில் உள்ள கலாச்சார நிலையங்கள் உட்பட 52 நிலைகள் மீது புதிய படைக்கலன்களால் தாக்குதல் செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்காவை 13 வழிகளில் எம்மால் தாக்க முடியும் என ஈரான் சூளுரைத்தது. அதன் முதல் வழியாக 2020 ஜனவரி 8-ம் திகதி ஈரான் 22 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கப்படை நிலைகள் மீது ஏவியது.


ஈரானின் 13 வழிகள் இப்படி இருக்கலாம்:

1. அமெரிக்கப் படைநிலைகள் மீது ஏவுகணை வீசித் தாக்குதல்

2. 9/11 பாணியில் விமானத் தற்கொடைத் தாக்குதல்

3. மீன் பிடிப்படகுகள் போல பயணித்து அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது தற்கொடைத் தாக்குதல்.

4. சீனாவிடமிருந்து வாங்கிய கப்பல் அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது வீசி அவற்றை அழிக்கலாம்.

5. அமெரிக்காவில் மக்கள் நெரிசல் நிறைந்த இடங்களில் வாகனத்தை ஓட்டி மக்கள் மீதி மோதிக் கொல்லலாம்.

6. நேர வெடி குண்டுகளை அமெரிக்க நகரங்களை வெடிக்க வைக்கலாம்.

7. ஹிஸ்புல்லா அமைப்பினர் மேற்காசியாவில் அல்லது வட ஆபிரிக்காவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.

8. சவுதி அரேபிய எரிபொருள் உற்பத்தி நிலயங்களை ஏவுகணை வீசி அழிக்கலாம்.

9. இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து பெருமளவு ஏவுகணைகளை ஒரேயடியில் வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம்.

10. ஈரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் மூலம் அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.

11. இரசியாவை ஹோமஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் துறைமுகம் ஒன்றில் ஒரு கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்கலாம். அதன் மூலம் உலக எரிபொருள் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

12. சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாஹ்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அங்குள்ள அமெரிக்கத் தளத்தை அகற்றலாம்.

13. ஈரானைச் சூழவுள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் அல்லது தற்கொடைத்தாக்குதல் செய்யலாம்.