Archive for the ‘ஸ்ரெப்ரெனீட்சா’ Category

போல்கன் பிராந்தியம் என்பது தைரேனியன் கடல், மத்திய தரைக் கடல், கருங்கடல் ஆகியவற்றின் இடையில் உள்ள ஒரு குடாப்பிராந்தியம் ஆகும். குரோசியா, பொஸ்னியா, ஹெர்ஜெகோவியா, சுலேவெனியா, சேர்பியா, மொன்ரினிக்ரோ, கொசோவா, மசடோனியா, பல்கேரியா, அல்பேனியா, கிரேக்கம் ஆகிய நாடுகளும் துருக்கியின் ஒரு பகுதியும் போல்கன் பிராந்தியத்தினுள் அடங்கும். மேற்கு போல்கன் பிராந்தியத்தில் உள்ள வியாபார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர் ஸ்ரெப்ரெனீட்சா ஆகும். மேற்கு போல்கன் பிராந்தியத்தில் அகழப்பட்ட வெள்ளித் தாதுகளின் வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக ஸ்ரெப்ரெனீட்சா இருந்தது. ஸ்ரெப்ரெனீட்சா என்பதன் பொருள் வெள்ளி நகரம் என்பதாகும்.

ஸ்ரெப்ரெனீட்சா நகரம் ரோமாபுரியின் ஆட்சிக்குக் கீழும் பின்னர் 13-ம் 14-ம் நூற்றாண்டுகளில் பொஸ்னியாவின் ஆட்சிக்குக் கீழும் இருந்தது. உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் ஸ்ரெப்ரெனீட்சா நகரம் அதன் வர்த்தக முக்கியத்துவத்தை இழந்தது. இதனால் அங்கிருந்து கிறிஸ்த்தவர்கள் வெளியேற அங்கு இஸ்லாமியர்களின் தொகை அதிகரித்தது. தேவாலயங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது
ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பல சேர்பியர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1941-ம் ஆண்டு செட்னிக்குகள் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்துக்குள் சென்று பல இஸாமியர்களைக் கொன்றனர்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் சுலோவேனியா(Slovenia), குரோசியா (Croatia), பொஸ்னியாவும் ஹெர்ஜெகொவினாவும் (Bosnia and Herzegovina), சேர்பியா (Serbia), மொண்டெநிக்ரோ (Montenegro), மசெடோனியா (Macedonia) ஆகிய நாடுகளை இணைத்து யூக்கோஸ்லாவியா என்னும் சோசலிச கூட்டாட்சிக் குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) உருவாக்கப்பட்டது. மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த பொருளாதாரமாக யூக்கோஸ்லாவியா இருந்தது. 1980களின் ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவின் உருவான அரசிய நெருக்கடியில் யூக்கோஸ்லாவியாவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

1992-ம் ஆண்டிற்கும் 1995-ம் ஆண்டிற்கும் இடையில் நடந்த பொஸ்னியப் போரின் போது ஸ்ரெப்ரெனீட்சா நகரம் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 1992 ஏப்ரல் மாதம் ஸ்ரெப்ரெனீட்சா நகரம் சேர்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. எறிகணைகளை மழைபோல் பொழிந்த சேரியப்படையினர் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்திற்கு உணவு செல்லாமல் தடுத்தனர். 1993-ம் ஆண்டு ஸ்ரெப்ரெனீட்சா நகரம் பாதுகாப்பு வலயமாக ஐக்கிய் நாடுகள் சபையால் பிரகடனப் படுத்தப்பட்டது. 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இருந்த டச்சுப் படையினரை சேர்பியர்கள் விரட்டினர். 30 ஐநாவின் அமைதிப் படையினரை பணயக் கைதிகளாகவும் பிடித்தனர். டச்சுத் தளபதி நேட்டோப்படையினரை விமானத் தாக்குதல் செய்யும் படி வேண்டு கோள் விடுத்தார். ஆனால் நேட்டோப் படையினர் ஏதும் செய்யவில்லை. டச்சு விமானங்கள் சேர்பியரின் இரு நிலைகள்மீது குண்டுகள் வீசின. தம்மிடம் பணயக் கைதிகளாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவோம் என சேர்பியர்கள் மிரட்டியதால் டச்சு அமைதிப் படையினர் பின்வாங்கினர். தம்மிடமிருந்த 11 டச்சுப் படையிரனை விடுவிக்க முகாம்களில் தஞ்சமடைந்து இருந்த 5,000 முஸ்லிம்களை சேரிப்யப் படையினரிடம் டச்சுப் படையினர் ஒப்படைத்தனர். சேர்பியப் படையினர் இஸ்லாமிய சிறுவர்களை இனிப்பு வழங்க அழைத்து அவர்களை பெரியவர்களிடமிருந்து பிரித்தனர். பின்னர் 12 வயது முதல் 77 வயதுவரையான ஆண்களைத் தனிமைப் படுத்திக் கொன்றனர். பின்னர் 25,000 இற்கும் 30,000இற்கும் இடைப்பட்ட தொகையைக் கொண்ட பெண்களும் சிறுவர்களும் ஸ்ரெப்ரென்ஈட்சா நகரில் இருந்து விரட்டப்பட்டனர். இறுதியில் தம்மிடமிருந்த படைக்கலன்களைக் கைவிட்டு டச்சுப் படையினர் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் இருந்து வெளியேறினர்.

நேட்டோப் படைகளுக்கு ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என அறிந்தும் அதைத் தடுக்க அவர்கள் ஏதும் செய்யவில்லை.

பொஸ்னியப் போரின்முன்னர் ஸ்ரெப்ரெனீட்சா நகரின் இருந்த 36,666 மக்கள் தொகையில் 27,572 பேர் பொஸ்னிய முஸ்லிம்களாகும். தற்போது இருக்கும் பத்தாயிரம் மக்களில் பெரும்பான்மையினர் சேர்பியர்களாகும். மீள் குடியேறச் சென்ற ஆயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டுவிட்டனர்.
2004-ம் ஆண்டு யூக்கோஸ்லாவியாவிற்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal for the former Yugoslavia) ஸ்ரெப்ரெனீட்சாவில் 8,000 ஆண்களைத் தனிமைப்படுத்திக் கொன்றது ஒரு இனக்கொலை எனத் தீர்ப்பளித்தது. 2007-ம் ஆண்டு பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) இத்தீர்ப்பை உறுதி செய்தது.
ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் நடந்தது ஒரு இனக்கொலை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்துவிட்டது.

போல்கன் பிராந்தியம் தற்போது மேற்கு நாடுகளுக்கும் இரசியாவிற்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக மாறிக் கொண்டிருக்கின்றது. இதன் ஓர் அமசமாகவே பிரித்தானியா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதே காரணத்திற்காக இரசியா இரத்துச் செய்து விட்டது.