Archive for February, 2016


1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்திச் செலவிலும் குறைந்த விலை உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் போது அந்தப் புதிய உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா அப்போது தெரிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்த்தான் போரும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தை 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய வைத்தது.
அப்பன் காட்டிய வழி
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊடகம் ஒன்றில் வெளி-ஆசிரியத் தலையங்கம் எழுதிய றோனால்ட் றீகனின் மகன் மைக்கேல் றீகன் தனது தந்தை எப்படி சவுதி அரேபியாவை உலகச் சந்தையில் எரிபொருளைக் கொட்டிக் குவிக்கும் படி சொன்னார் என்பதை அம்பலப் படுத்தினார். இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் வருமானத்தைச் சிதைத்து அதன் நாணயமான ரூபிளை வீழ்ச்சியடையச் செய்வதுமாகும். மைக்கேல் றீகன் தனது கட்டுரையில் அப்போது சோவியத் ஒன்றியத்திடம் இருந்த உலகில் விற்கக் கூடிய ஒரே பொருள் எரிபொருள் மட்டுமே எனத் தெரிவித்ததுடன் பராக் ஒபாமா தனது தந்தையின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் மைக்கேல் அந்த ஆலோசனையைச் சொல்ல முன்னரே ஒபாமா அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்.
செயல் மீளியக்கம் – Action Replay
தற்போது1980களில் நடந்தவையின் செயல் மீளியக்கம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் விலை கண்டபடி வீழ்ச்சியடைகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியப் படைகள் இரகசியமாக நிலைகொண்டிருக்கின்றன. அது இரசியாவிற்கு ஒரு செலவு. அது போதாது என்று சிரியாவில் இரசியப் படை நிபுணர்களும் சிறுபடைப்பிரிவும் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் 20,000போர்த்தாங்கிகள், 2,450 போர் விமானங்கள், 460 உழங்கு வானூர்திகள், சகிதம் சவுதி அரேபியா தலைமையில் துருக்கி உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 350,000 படையினர் சிரியா மீது படையெடுக்கத் தயாராகி உள்ளனர். சிரியாவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டுமாயின் இரசியா தனது பல படைப் பிரிவுகளை சிரியாவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இரசியா கடல்வழியாக சிரியாவிற்குப் படையினரை அனுப்புவதற்கு தனது வோல்கா நதியில் ஆரம்பித்து கருங் கடலூடாகவும் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள துருக்கி நீரிணையூடாகவும் ஏகன் கடலூடாகவும் சென்று மத்தியதரைக் கடலை அடையவேண்டும். துருக்கியால் இரசியாவை இலகுவாக துருக்கி நீரிணையில் வைத்து இரசியக் கடற்போக்கு வரத்தைத் தடுக்க இயலும். இரண்டாம் உலகப் போரின் போதும் துருக்கி அப்படிச் செய்தது.
இரசியாவின் மேற்கு கறுக்கின்றது
அமெரிக்கப் பாரளமன்றத்திற்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.
இரண்டாம் பனிப்போர்
2016 பெப்ரவரி 12-ம் திகதி ஆரம்பமான மூன்று நாள் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இரசியத் தலைமை அமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் தற்போது இரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை புதிய பனிப்போர் என விபரிக்கலாம் என்றார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைவலுவை அதிகரிப்பதன் மூலம் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அமெரிக்கா குலைக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் நேட்டோப் படையினரும் செய்யும் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி  ஜெனரல் பிலிப் பிரீட்லவ் அப்படி ஒரு பனிப்போர் இல்லை என்றார். ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி இரசியப் படைகள் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
கருங்கடலில் நெருங்கும் எதிரிகள்
கிறிமியாவை 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடன் இணைத்த இரசியா மிகவும் துரிதமாக அங்கு தனது போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் குவித்தது. அத்துடன் கருங்கடலில் தனது கடற்படை வலுவையும் பெருக்கியது. எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகளின் வான்பரப்பை நேட்டோப் படைகள் 24 மணித்தியாலமும் கண்காணிப்பது போல் கருங்கடலையும் கண்காணிக்கும் திட்டத்தை நேட்டோப் படையினர் செயற்படுத்தலாம். இதுவரை கருங்கடலை ஒட்டி துருக்கியில் ஒரு நேட்டோ கடற்படைத் தளம் அமைப்பதை அனுமதிக்காத துருக்கி இனி ஒரு கடற்படைத்தளம் அமைக்க ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நேட்டோவின் பிரச்சனை
விளடிமீர் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பையிட்டு கவலையடைந்தன. உக்ரேனில் இரசியா செய்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் அச்சமடையவும் தொடங்கின. போதாக் குறைக்கு இரசிய அரசுறவியலாளர்கள் அடிக்கடி அணுப் படைக்கலப் போர் என்றும் மிரட்டிக் கொண்டுருக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் அணுப்படைகலன்கள் பழமையானவை. அதன் செயற்திறன்களையிட்டு ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பவில் உள்ள அணுப் படைக்கலன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவழிக்க எண்ணியுள்ளது.
இரு திருச்சபைகளின் தலைகளின் சந்திப்பு
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13-ம் திகதி சனிக்கிழமை கியூபாத் தலைநகர் ஹவானாவில் இரசிய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும் கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களும் சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இணைந்து ஒரு பிரகடனத்திலும் கைச்சாத்திட்டனர். இருவரினதும் சந்திப்பில் ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கும் கிருத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவர்கள் கைச்சாத்திட்ட பிரகடனத்தில் நாம் உடன்பிறப்புக்கள் பகைவர்கள் அல்லர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புட்டீனின் உதவியாளராகக் கடவுள்
ஐ எஸ் அமைப்பின் வளர்ச்சி வெற்றியில் முடிந்தால் வட ஆபிரிக்கா, மேற்காசியா, மத்திய ஆசியா ஆகிய பெரு நிலப்பரப்பு இஸ்லாமிய அரசாக உருவெடுக்கும். இதில் அணுப்படைக்கலனகளைக் கொண்ட பாக்கிஸ்த்தானும் அடக்கம். அதனால் ஒரு பெரு வல்லரசாக உருவெடுக்கலாம். இதையிட்டி திருச்சபைகள் கரிசனை கொண்டுள்ளன போல் தெரிகின்றது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கிறிஸ்த்தவம் இணைத்து வைத்திருக்கின்றது என்பது உண்மையாகும். அதுதான் நேட்டோக் கூட்டமைப்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இரசியா தம்முடன் இணையும் என எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டமைப்பு உக்ரேன் விவகாரத்துடன் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இப்போது வேறு விதமாக அணுகப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை, எரிபொருள் விலை திட்டமிட்டு விழச்செய்தமை, இரசியாவை சிரியாவில் ஒரு போரில் மாட்ட வைத்தமை ஆகியன புட்டீனின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளில் தவிடு பொடியாக்கும் நோக்கதிலேயே செய்யப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தை ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்க வைக்காமல் 11 ஆண்டுகளில் சிதைத்தது போல புட்டீனின் பிடியில் இருந்து இரசியாவை மீட்டெடுக்கும் போது ஏற்படும் அதிகார இடைவெளியால் இரசியாவில் பெரும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க இரசிய மரபுவழித் திருச்சபையின் தலையீடு அவசியம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவில் மரபுவழித் திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஈரானிற்கு எதிரான் பொருளாதாரத் தடை கொண்டுவந்த போது அதை ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்யாமல் இருக்க இரசியத் திருச்சபை உதவியாக இருந்தது. இரசியாவில் திருச்சபைக்கும் புட்டீனிற்கும் இடையில் நல்லுறவு இருந்தாலும் திருச்சபையை புட்டீன் தனக்கு அடங்கி நடக்கும் ஒன்றாகவே வைத்திருக்கின்றார். ஒரு அமெரிக்க ஊடகம் இஸ்லாமிய நாடுகளில் கடவுளே அரசர்; சீனாவிலும் ஜப்பானிலும் அரசரே கடவுள்; இரசியாவில் கடவுள் புட்டீனின் உதவியாளர் என நகைச்சுவையாக புட்டீனிற்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை விபரித்தது. புட்டீனுடன் திருச்சபை ஒத்துழைத்தாலும் அவர் தம்மீது காட்டும் மேலாண்மையை திருச்சபை விரும்பும் எனச் சொல்ல முடியாது.
உலகத்தை ஒரே ஒழுங்கில் கொண்டு வருதல் என்னும் போர்வையில் அமெரிக்க ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உலகத்தைக் கொண்டு வர திருச்சபைகளின் கியூபச் சந்திப்பு வழிவகுக்குமா?


சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் போரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக காத்திரமான தாக்குதல் செய்யக் கூடியவர்களாகவும் கணிசமான வெற்றியை ஈட்டியவர்களாகவும் குர்திஷ் போராளி அமைபினரே இருக்கின்றனர். ஐ எஸ் அமைப்பினர் இரண்டு வகைகளில் குர்திஷ் போராளிகளுக்கு அஞ்சுகின்றனர். ஒன்று அவர்கள் தீரமிக்க போராளிகள். மற்றது அவர்களின் பெண் போராளிகள் ஆண்களிலும் பார்க்க வீரமாகப் போராடுகின்றார்கள். ஒரு பெண்ணால் கொல்லப்படும் புனிதப் போராளி நரகத்திற்குப் போவன் என ஐ எஸ் அமைப்பினர் உறுதியாக நம்புகின்றார்கள்.

நிலம் பிடிக்கும் குர்துகள்
இரசியப் படைகளின் உதவியுடன் அலெப்பே பிராந்தியத்தில் சிரியப் படைகள் பெரும் தக்குதல்கள் செய்யும் போது குர்திஷ் போராளிகள் தமக்கென சில நிலப்பரப்புக்களைக் கைப்பற்றினர். இரசியப் படைகளினதும் சிரியப் படைகளினதும் நோக்கம் துருக்கிய எல்லையில் இருந்து அமெரிக்க சார்பு போராளிக் குழுக்களைத் துண்டிப்பதாகும். இதனால் அவர்களுக்குத் துருக்கியில் இருந்தும் துருக்கியூடாகவும் கிடைக்கும் விநியோகங்களைத் தடுக்க முடியும். இரசியப் படைகள் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மற்றக் கிளர்ச்சிக்காரரிகளிடமிருந்து நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதை இரசியா விரும்புகின்றது அல்லது ஆட்சேபனை இன்றி இருக்கின்றது எனச் சொல்லலாம். 
ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழ்கின்றார்கள். அவர்கள்து போராட்டம் பல இனக்கொலைகளுக்கு மத்தியில் ஒரு நூற்றாண்டாகத் தொடர்கின்றது. சிரியாவில் அவர்களுக்கு என்று குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. சிரியாவில் அவர்கள் வாழும் பிரதேசத்தில் 2.5பில்லியன் பீப்பாய் எரிபொருள் உண்டு ஆனால் அதனால் கிடைக்கும் வருமானத்தில் எதுவும் அவர்களுக்குப் பயன் தருவதில்லை. துருக்கியில் இரண்டு கோடி குர்திஷ் மக்கள் வாழ்கின்றனர். முதலில் அவர்கள் தனிநாடு கோரியும் பின்னர் சுயாட்சி வேண்டியும் போராட்டம் செய்கின்றனர்.

குர்திஷ் மக்களைப் பாதுகாப்பதாக இரசியா உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சிரிய எல்லையைத் தாண்டிச் சென்று துருக்கி தாக்குதல்கள் நடத்தினால் இரசியாவுடன் ஒரு பெரும் போரைத் துருக்கி எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அப்படி ஒரு உத்தரவாதம் குர்திஷ் மக்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறு. ஆனால் குர்திஷ் மக்களை மோசமான எதிரிகளாகப் பார்க்கும் சிரிய ஆட்சியாளர்களுக்கும் அலவைற் இனக்குழுமத்தினருக்கும் தற்போது இரசியா மிக நெருங்க்கிய நட்பைப் பேணுகின்றது. எதிரியின் நண்பனின் உத்தரவாதத்தை எந்த அளவிற்கு நம்பலாம்? இரசியாவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களிலும் பார்க்க அரபு மொழி பேசும் அலவைற் இனத்தினர் அதைக கேந்திரோபாய முக்கியத்துவ பெற்றவர்கள். 

குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையான போதெல்லாம் குர்திஸ் மக்களின் போராட்டத்திற்கு உதவுபோல் பாசாங்கு காட்டிக் கொண்டு அவர்களைத் தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வைப்பதும் பின்னர் அவர்களைக் கைவிடுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. குர்திஸ் மக்களும் தமிழர்களைப் போலவே சரித்திரத்தில் இருந்து கற்றுக் கொள்வதில்லை.
ஓர் இனத்திற்கு அந்நியர்கள் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொடுத்துப் போராட ஒரு வலுமிக்க அல்லது எண்ணிக்கை அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட எதிரிக்கு எதிராகப் போராட வைப்பது ஆபத்து மிக்கது. அது இனக்கொலையிலேயே போய் முடியும்.
1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது.
1967-ம் ஆண்டு ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தை விரிவாக்க முயன்ற போது அவருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியது. அப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஈரானுடாக இது நடந்தது. 1972-ம் ஆண்டு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட ரிச்சட் நிக்சனும் ஹென்றி கிஸ்ஸிங்கரும் குர்திஷ் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்ற உறுதி மொழியையும் வழங்கினர். ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஈரானின் அமெரிக்காவின் ஒரு மோசமான எதிரியாக மாறிய பின்னர் ஈரானால் ஈராக்கிற்கு ஆபத்து என்ற எண்ணம் ஈராக்கில் திட்டமிட்டு விதைக்கபட்டது. இதனால் ஈராக் ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை வளர்த்துக் கொண்டது. ஈரான் ஈராக் போர் மூண்டது. 1975-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட போது அமெரிக்கா தமக்கு உதவும் என குர்திஷ் மக்கள் நம்பி ஏமாந்தனர். ஈராக்கிய குர்திஷ் மக்களின் தலைவர் Mullah Mustapha Brazani  ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள் அவரது செவியில் ஏறவில்லை.
1991-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குவைத்தை ஆக்கிரமித்த போது சிஐஏ சவுதி அரேபியாவில் இருந்து செய்யப் பட்ட ஒரு வானொலி மூலம் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. அவர்களுக்கு எதிராக சதாம் தாக்குதல் செய்த போது அவர்களுக்கு என ஒரு பாதுகாப்பு வலயம் உருவாக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அப்பாதுகாப்பு வலயத்தில் வைத்தே அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
2003-ம் ஆண்டு அமெரிக்கா சதாம் ஹுசேய்ன் பேரழிவு விளைவிக்கும் படைக்கலனகளை வைத்திருக்கின்றார் என்ற போர்வையில் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போதும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ குர்திஷ் மக்களையும் சதாமிற்கு எதிராகப் போர் செய்ய வேண்டியது. மீண்டும் குர்திஷ் மக்கள் அமெரிக்காவுடன் இணைந்து போராடினார்கள். மீண்டும் பெரிய அளவில் இனக்கொலைக்கு உள்ளானார்கள். 2008-ம் ஆண்டு துருக்கியப் படைகள் ஈராக்கின் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களை வேட்டையாடிய போது குர்திஷ் போராளிகள் தொடர்பாகவும் அவர்களது நிலைகள் தொடர்பாகவும் தேவையான தகவல்களை சிஐஏ துருக்கிக்கு வழங்கியது. .

குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK)இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ)இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா – இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.
மீண்டும் குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியப் பத்திரிகையான தி இண்டிப்பெண்டென்றில் ஒவ்வொரு பிராந்திய அரசுகளும் குர்திஷ் மக்களுக்குத் துரோகமிழைத்தன என்னும் தலைப்பில் ரொபேர்ட் பிஸ்க் எழுதிய கட்டுரையின் முதல் வரி “குர்திஷ் மக்கள் துரோகம் இழைக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்” என அமைந்தது.
Syrian Kurdish Democratic Union Party (PYD)இன் படைப்பிரிவான YPG அலேப்பே நகரில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகின்றார்கள் என்பதால் துருக்கி 2016-ம் பெப்ரவரி 16-ம் திகதி அவர்களின் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. மறுதினம் துருக்கியில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன அது குர்திஷ் “பயங்கரவாதிகளின்” செயல் என்றார் துருக்கியத் தலைமை அமைச்சர். ஈழ மக்களின் போராட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் குண்டு வெடிப்பை யார் செய்திருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகித்து அறிந்து கொள்வார்கள். ஓர் இனம் இன்னொரு நாட்டினுள் தனக்கு என ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கும் போது இன்னும் ஒரு நாடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றது என்பதற்கான விடையையும் ஈழப் போராட்டத்தையும் அமைதிப் படையின் செயற்பாட்டையும் அறிந்தவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள்.

துருக்கியின் Indecent proposals)
சிரியக் குர்திஷ் போராளிகளுடன் சமாதானமாகப் போக துருக்கி இரண்டு அசிங்கமான முன்மொழிவுகளைச்  (Indecent proposals) செய்துள்ளது: 1 குர்திஷ் போராளிகள் சிரிய அதிபர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து விரட்ட போர் செய்ய வேண்டும். 2 தங்களுக்கு சுயாட்சி கோருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.  தற்போது குர்திஷ் மக்கள் சிரியாவில் கொபானி, ஜஜீரா ஆகிய நகரங்களில் நிழல் அரசுகளை நடத்தி வருகின்றார்கள். இரண்டையும் இணைக்கும் பிரதேசம் ஐ எஸ் போராளிகளிடமுள்ளது. அதைக் கைப்பற்றுவதே அவர்களின் தற்போதைய முக்கிய நோக்கமாகு. ஆனால் இந்தப் பிரதேசம் துருக்கியுடன் எல்லையைக் கொண்டுள்ளது.


அமெரிக்காவின் பொறுப்பாகும்
தற்போது உள்ள சூழ்நிலையில் துருக்கிக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தைச் செய்து வைக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். அமெரிக்காவுடன் குர்திஷ் மக்கள் இணைந்து போராடுவத்தால் அது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால் அமெரிக்கா யாரையும் நண்பனாகக் கருதுவதில்லை 1970இல் அமெரிக்கா ஈராக்கில் குர்திஷ் மக்களின் கால்களை வாரியபோது அதன் நியாயத் தன்மையைப் பற்றி கேள்வி கேட்ட போது ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன பதில்: இரகசிய நிலக்கீழ் படை நடவடிக்கை வேறு மதப்பரப்பு (missionary) நடவடிக்கைகள் வேறு என்றார். தற்போது இரசியா குர்திஷ் போராளிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கா அவ்வப் போது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.  இறுதியில் அவர்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்.

2016ஆங்கிலப் புத்தாண்டு சீனாவிற்கு மோசமாக ஆரம்பித்தது. வீழ்ச்சியடையும் பங்கு விலைகள், வேகம் இழக்கும் பொருளாதாரம், விழும் நாணயப் பெறுமதி, என்பன ஒரு புறம் சீனாவை ஆட்டிப் படைக்க மறு புறம் சீனா தனது என அடம் பிடிக்கும் தென் சீனக் கடற் பிரதேசத்தில் ஐக்கிய அமெரிக்கா மூன்றாவது  முறை “அத்துமீறியது”.  போதாக் குறைக்கு தாய்வானில் சீனவிற்கு எதிரான கொள்கை கொண்டோர் ஆட்சியைக் கைப்பற்றினர்.  அவை போகட்டும் சீனாவின் தேசியப் புத்தாண்டான குரங்கு ஆண்டுப் பிறப்பாவது ஒழுங்காக நடக்குமா என சீனா எதிர்பார்த்துக் கொண்டு சீனா வாண வேடிக்கை செய்து கொண்டிருக்கையில் சீனாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பாரிய வாணம் ஒன்றை வட கொரியா வெடிக்க வைத்தது. வட கொரியா வெடிக்க வைத்தது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் சென்றதுடன் ஒரு செய்மதியையும் மிதக்க விட்டுள்ளது.  இந்த ஏவுகணைகளின் மூலம் வட கொரியாவால் முழு ஐரோப்பியக் கண்டம், கனடா, ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பகுதி, ஒஸ்ரேலியா, வட ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களில் அணுக்குண்டுகளை வீச முடியும்.

வாடும் கொரியாவை வாழவைக்க ஏவுகணை!
வட கொரியா பரிசோதித்த ஏவுகணை 440 இறாத்தல் எடையுள்ளது. அது 2012-ம் ஆண்டு பரிசோதித்த ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு பாரமானது. இந்த ஏவுகணைப் பரிசோதனை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங்கின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2016 மே மாதம் மக்கள் கட்சியின் மாநாட்டில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது. அத்திட்டம் அணுக்குண்டு பரிசோதனைகளுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகும். கிம் உல் ஜொங்கின் பேரனது ஆட்சிக்காலத்தில் இருந்த செழிப்பை நாட்டில் மீண்டும் கொண்டுவரும் திட்டம் அப்பொருளாதாரத் திட்டமாகும்.  வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உள்நாட்டில் இருக்கும்  பேராதரவைத் தகர்க்கக் கூடிய வகையில் வெளிநாட்டு அழுத்தங்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு வெளி அழுத்தத்தை சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும்.  வட கொரியா இன்னும் ஒரு அணுக்குண்டுப் பரிசோதனையைச் செய்யவிருக்கின்றது என தென் கொரிய உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அப்படி ஒரு பரிசோதனை 2016 மே மாதத்திற்கு முன்னர் நடக்கலாம் என்கின்றது.  வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பான் வட கொரியாவிற்குப் பணம் அனுப்புவதை கட்டுப்படுத்தியது. தென் கொரியா வட கொரியாவில் நிறுவிய கைத்தொழிற் பேட்டையை மூடியது. தென் கொரியா வடகொரியாவுடன் இணைந்து நடத்திய கைத்தொழிற்பேட்டையில் உள்ள 120இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 54,000இற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் பணிபுரிந்தார்கள். 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கைத்தொழிற்பேட்டையில் தென் கொரியா 840மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் வட கொரியா 110மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றது. இக் கைத்தொழிற்பேட்டை மூடப்பட்டதுடன் தென் கொரியாவில் இருந்து செய்து வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

குருவிற்கு அடங்கா மாணவன்
சீனா வட கொரியாவின் புரவலர் (patron) நாடு  என்னும் அளவிற்கு அதற்குப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. வட கொரியா அணுக்குண்டுப் பரிசோதனை செய்வதை நிறுத்தும் படி சீனா விடுக்கும் வேண்டு கோள்களிற்கு வட கொரியா செவிமடுப்பதில்லை. வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் முன்னணி அரசுறவியலாளரான வு டவே(Wu Dawei) வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். வட கொரியா 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹைட்ரஜின் அணுக்குண்டு ஒன்றை வட கொரியா வெடித்துப் பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி சீனத் தலைநகர் பீஜீங் சென்று வட கொரியாவிற்கு எதிராக சீனா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்தே சீன அரசுறவியலாளர் வு டவே(Wu Dawei) பியோங்யாங் சென்றார் ஆனால் அங்கு அவரது வேண்டுகோள் எவற்றிற்கும் வட கொரிய அதிபர் கிம் உல் ஜொங் இணங்கவில்லை. அவரை வட கொரியா வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதாக அமெரிக்க முன்னணி நாளிதளான நியூயோர்க் ரைம்ஸ் எள்ளி நகையாடியது.  கிம் உல் ஜொங் பதவிக்கு வந்ததில் இருந்து சீன வட கொரிய உறவு மோசமடைந்து வருகின்றது. கிம் உல் ஜொங் ஆட்சிய்க்கு வந்ததில் இருந்து இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. கிம் உல் ஜொங் ஆட்சியை இரும்புப் பிடியாகப் பிடித்துள்ளார். அவரை ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள் காணாமற் போய்விருவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அப்படி அண்மையில் காணாமற் போனவர் படைத்தளபதி ரி யிங் ஜொல். அவர் கொல்லப்பட்டதாக்வும் செய்திகள் வெளிவந்தன.

காத்திருந்த அமெரிக்கக் கொக்கு

சிறு அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்குவது ஐக்கிய அமெரிக்காவை இரண்டு வகையில் கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஒன்று வட கொரியாவால் ஐக்கிய அமெரிக்காமீது அணுக்குண்டுத் தாக்குதல் செய்யக் கூடிய நிலை உருவாகும். இரண்டாவது இத் தொழில் நுட்பத்தை வட கொரியா ஈரானுக்கு வழங்கினால் அது இஸ்ரேலின் இருப்பிற்குப் பேராபத்தாகும். இதைத் தவிர்க்க அமெரிக்கா தனது காய்களை நகர்த்த வேண்டும். அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defence ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன.  இவற்றை தென் கொரியாவில் நிறுவ ஐக்கிய  அமெரிக்கா நீண்ட காலமாக விரும்பி இருந்தது. அதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தாட் ஏவுகணைகள் தென் கொரியாவில் நிறுவினால் அது தனது ஏவுகணைகளைவலுவிழக்கச் செய்து தனக்கு சாதகமான படைத்துறைச் சமநிலையை உருவாக்கும் என்றது சீனா. சீனாபெருமளவு வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதால் சீனாவை அதிருப்திப் படுத்த தென் கொரியாவும் விரும்பவில்லை. ஆனால் 2016-ம் ஆண்டு வட கொரியா செய்த அணுக்குண்டுப் பரிசோதனையின் பின்னர்   தென் கொரியா அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தனது நாட்டில் நிறுவுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.

என்ன இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை?

ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும்.  . அமெரிக்காவின் புதிய தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.

பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம்

வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பானும் தென்  கொரியாவும் அமெரிக்கப் பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்டின. அதில் வட கொரியாவிற்கு எதிரான ஒரு கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது.  சீனப் படைத்துறையினர் வட கொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பாதுகாப்பு அரணாக வட கொரியா உள்ளதாகக் கருதுகின்றனர். தென் கொரியா போல் அதுவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறுவதையோ அல்லது இரு கொரியாக்களும் இணைந்து முழுக் கொரியாவும் அமெரிக்க சார்பாக மாற்வதோ சீனாவிற்கு ஆபத்தாகும். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை தற்போதைய ஆட்சியாளர்ளிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து அங்கு அமெரிக்கா சார்பு நிலை தோன்றுவதற்கு வழி வகுக்கும் என சீனா  கருதுகின்றது. இதனால் கடந்த காலங்களில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையை சீனா தடுத்து வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவிருக்கும் வட கொரியாவிற்கு எதிரான தீர்மானத்தில் சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்க விருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும். வட கொரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டுவரக் கூடிய தீர்மானத்திற்கு ஆதரவா அல்லது தென் கொரியாவில் அமெரிக்கா புதுத் தர ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுவச் செய்வதா என்ற இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலைக்கு சீனாவை அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கின்றது.

ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.

உடையும் என்பார் உடையாது

ஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

புட்டீனின் இரசியாவில் சவால்கள்

புட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.

பட்டினியால் வாடாத இரசியார்கள்
2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

களம் பல கண்ட இரசியா
1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது.  2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.

ஒரு மூலம் போதாது
எரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

படைக்கு முந்து
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

உலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு
இரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.
.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டவுடன் ஈரானிற்கு முதலில் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகும். சீனாவிற்கு ஒரு நெருங்கிய நட்பு நாடு அவசியம் தேவை. அதன் நட்பு நாடாக வரக்கூடிய தன்மைகள் ஈரானிற்கு இருக்கின்றது. நாடுகளிடையே நட்பு என்பது மனிதர்களிடையே உள்ள நட்பைப் போல் அல்ல. ஒன்றிற்கு ஒன்று நலன் தரக்கூடிய வகையில் நாடுகளிடையே உள்ள தொடர்புகளையே நாடுகளிடையேயான நட்பு எனப்படும். ஈரானும் சீனாவும் ஒன்றின் நலன்களை ஒன்று மேம்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன. மேற்காசியாவிற்கும் வட ஆபிரிக்காவிற்கும் சீனாவின் நுழைவாயிலாக ஈரானைக் கருத முடியும். ஈரானும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமாக இருந்த நிலையில்சீன அதிபர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்த சூழ்நிலை சீனாவிற்கு சாதகமாக அமைந்தது.

புவிசார் அரசியல்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான பல் வேறு நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம், படைவலு எனப் பலவற்றை இந்த உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது. ஈரானின் உள்ள இயற்கை வளங்களும் ஈரானின் பூகோள இருப்பும் சீனாவின் நலன்களிற்குத் தேவையானவை. சீனாவின் உட்கட்டுமான அனுபவமும் சீனாவிடமிருக்கும் அபரிமிதமான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பும் ஈரானின் நலன்களுக்குத் தேவையானவை. இரு நாடுக்ளும் கை கோர்த்துக் கொண்டால் வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரான் எதிரியாகக் கருதுவதும் சீனா போட்டியாளராகக் கருதுவதுமான ஐக்கிய அமெரிக்காவைச் சமாளிக்க முடியும். ஈரானிய சீன உறவில் முக்கிய பங்கு வகிப்பவை சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டமும் ஈரானின் மலிவான எரிபொருளுமாகும். மேற்காசியாவில் அமெரிக்க ஆதிக்கமில்லாத ஒரே நாடு ஈரானாகும். ஈராக்குடனான போரின் போது ஈரானுக்கு சீனா தனது பட்டுப்புழு(silkworm) ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்களை விற்பனை செய்தது.  ஈரானிற்கு யூரேனியப் பதப்படுத்தலுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் சீனா விற்பனைச் செய்திருந்தது.

உனக்கு நான் எனக்கு நீ
கடற்போக்குவரத்தைப் பொறுத்தவரை உலகின் ஐந்து திருகுப் புள்ளிகளில் ஒன்றான ஹோமஸ் நீரிணை ஈரானை ஒட்டி உள்ளது. பாஹ்ரேயில் இருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அந்தத் திருகுப் புள்ளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஈரான் அதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சீனாவின் கடல்சார் பட்டுப் பாதைத் திட்டத்தில் ஹோமஸ் நீரிணை முக்கியத்துவம் பெறுகின்றது. பாக்கிஸ்த்தானில் இருக்கும் குவாடர் துறை முகம் சீனா வசமுள்ளது. அது தான் சீனாவின் முத்து மாலையில் அந்திப்புள்ளி. அதை மேலும் நீட்சி செய்ய ஈரானின் நட்பு சீனாவிற்கு அவசியம். குவாடர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீனா 2015-ம் ஆண்டு 46பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஒதுக்கியிருந்தது.  குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபஹார் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் – ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபஹார் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்தது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபஹார் துறைமுகம் ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் – பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது.  ஈரானுடனும் துருக்கியுடனும் சீனா உகந்த உறவைப் பேணாமல் சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டம் உரிய வெற்றியைத் தரமாட்டாது.

நண்பனின் எதிரியும் நண்பனே
சவுதி அரேபிய அரச் குடும்பம் பொதுவுடமை வாதத்தை முழுமையாக எதிர்க்கும் ஒரு நாடு. சமூகவுடமையையும்(சோசலிஸம்) இஸ்லாமையும் இணைத்த பாத்திஸம் அரபுநாடுகளில் பரவுவதைக் கடுமையாக எதிர்த்த சவுதி அரேபிய அரச குடும்பம் 1990-ம் ஆண்டு சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சவுதி அரேபியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணும் போது அந்த இரண்டு நாடுகளினதும் போட்டி நாடுகளான ஈரானும் சீனாவும் இணைவது இயல்பானதே. ஆனால் சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதை சீனா பெரிதும் விரும்புகின்றது. அதிக அளவு எரிபொருள் இருப்பு உறுதியான ஆட்சி ஆகியவற்றைக் கொண்ட சவுதியில் இருந்து எரிபொருள் விநியோகம் உறுதியாகவும் சீராகவும் நடக்கும் என நம்பும் பல நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆனால் சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணத்தில் வாழும் இஸ்லாமியர்களால் சீனாவிற்குப் பிரச்சனை உண்டு. அவர்கள் சுனி இஸ்லாமியர்களாகும். அவர்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா தயங்காது என்பதும் சீனாவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும். சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணம் சீனாவின் தரைவழியான பட்டுப்பாதையும் பொருளாதார வளையமும் (The Silk Road Economic Belt) திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஈரானுக்கு மட்டுமால்ல சவுதி அரேபியாவிற்கும் பயணத்தை மேற் கொண்டார். ஈரானில் 17 உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்ட அவர் சவுதி அரேபியாவில் 2016 ஜனவரி  19-ம் திகதி 14 உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார். அதில் முக்கியமானது சவுதி அரேபியானின் அரம்கோ என்னும் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிறுவனம் சீனாவில் மசகு எண்ணை பதப்படுத்தும் முதலீட்டைச் செய்வதாகும். இதன் பெறுமதி ஒன்று முதல் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.

தடைகள் தாண்டிய நட்பு
ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இருந்த போதே சீனாவில் இருந்து பெருமளவு முதலீடுகள் ஈரானில் செய்யப்பட்டன. ஒரு சீனாத் தொழிலதிபர் மட்டும் பொருளாதாரத் தடையின் போது ஈரானில் 200மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்திருந்தார். நாம் ஈரானில் இருந்து விலகி இருந்த போது சீனர்கள் அந்த இடைவெளியை நன்கு நிரப்பி விட்டார்கள். ஈரானுடனான வர்த்தகத்தைப் பொறுத்த வரை நாம் பின் தங்கி விட்டோம் என்றார் ஒரு மேற்கு ஐரோப்பிய அரசுறவியலாளர். பொருளாதாரத் தடையின்போது ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் ஈரானில் மிக அதிக அளவு முதலீடு செய்யும் நாடாகவும் சீனா மாறிவிட்டது. அமெரிக்காவின் தண்டனைகளில் இருந்து தப்ப இதற்கென தனியாக புது வங்கிகள் சீனாவால் உருவாக்கப் பட்டன. இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொடருந்துப் பாதை சீனாவால் ஈரானில் நிர்மாணிக்கப்பட்டது. ஈரானிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது அதை தனது அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்துச் செய்யாததால் ஈரான் சற்று அதிருப்தி அடைந்திருந்தது. அத்துடன் ஈரானுடன் நடந்த யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்தக் கோரும் பேச்சு வார்த்தையில் சீனா அமெரிக்காவுடன் ஓத்துழைத்திருந்தது. ஆனாலும் பொருளாதாரத் தடையால் வந்த இடைவெளியை சீனா தந்திரோபாயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஈரானியத் தலைநகர் ரெஹ்ரானில் நிலத்தில் இருந்து உயர்த்தப் பட்ட பெருந்தெரு (elevated highway), நிலத்திற்குக் கீழான  தொடருந்துச் சேவை போன்றவற்றை சீனா நிர்ம்ணித்தது. போக்குவரத்திற்குத் தேவையான தொடருந்து வண்டிகளும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்டன.  சீனாவிடமிருந்து J-10 போfர் விமானங்களை வாங்க ஈரான் விரும்புகின்றது. இதற்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை அதிருப்திப் படுத்த விரும்பாததால் சீனா ஈரனிற்குப் J-10 போர் விமனங்களை விற்பனை செய்வ்தை ஒத்தி வைத்துள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறப்பான போர்விமானங்களை வாங்கி வைத்துள்ளன.

ஈரானிற்குப் பயணம் செய்த சீன அதிபருடன் ஈரான் அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான  வர்த்தகத்தை 600பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக ஒத்துக் கொண்டுள்ளது.  சீனா ஈரானில் ஆறு இலட்சம் தொன் உருக்கை உற்பத்தி செய்தவதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் கைத்தொழில் மயமாக்கலில் ஒரு திருப்பு முனையில் உள்ள நாடாகும். திறன் மிக்க ஊழியர்கள் அங்குள்ளனர். சீனாவின் முதலீடு, தொழில் நுட்பம், உட்கட்டுமான அனுபவம் ஆகியவற்றை ஈரானில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.